நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, களுத்துறை – தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரத்த அழுத்தம், இருதய நோய், இரத்தம் நஞ்சாதல் உள்ளிட்ட நோய்களுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கண்டி – தெல்தெனிய பகுதியில் 83 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமையே, அவரின் உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை தென் பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன், இரத்தம் விஷமாகியமை உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்