நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
பொசன் போயா விடுமுறைதினங்களை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நாடயாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகளவில் நகரங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.,
இன்னும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில் அத்தியவசியமற்ற தேவைக்காக ஒன்று கூடும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அத்தியவசிய தேவைகளுக்கு நகரங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, அரசாங்க மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.