தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கொழும்பு நகரம், மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுவோரைக் கண்காணிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கண்காணிக்கும் செயற்பாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்