கொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கொழும்பு கோட்டையில் 37 பேரும், நாரஹேன்பிட்டியில் 11 பேரும், நுகேகொடையில் 7 பேரும், ஹோமாகமையில் 5 பேரும், அதிக பட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில், நேற்று 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
களணியில் 14 பேரும், தெல்கொடையில் 9 பேரும், திவுலபிட்டிய, கம்பஹா மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் தலா 8 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 53 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 32 பேரும், கண்டி மாவட்டத்தில் 29 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 18 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 17 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 பேரும், கேகாலை மாவட்டத்தில் 15 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 81 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 75 ஆயிரத்து 842 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 453 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 714 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய, 42 வைத்தியசாலைகளில் 2 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
மேலும், 27 இடைநிலை பராமரிப்பு மையங்களில் 2 ஆயிரத்து 762 பேரும், 3 கட்டணம் செலுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்களில் 213 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் 3 பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தின், பள்ளியாகொட்டுவ மற்றும் கல்ஹின்ன ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 A கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்து முடக்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.