திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தமை காரணமாக திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதன் ஊடாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை 150 இல் இருந்து 50 ஆக குறைப்பது குறித்தும் முன்மொழியப்பட்டது.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விருந்தினர்களின் எண்ணிக்கையினை குறைப்பது சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு வழிவகுக்குமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருமண நிகழ்வுடன் தொடர்புடைய துறையில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.