பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பமானது.
இந்த நிலையில், தாழங்குடா -மட்டக்களப்பு தேவாலயத்தில் இருந்து இன்றைய இரண்டாம் நாள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் சுவீகரிக்கப்படுதல், முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுதல் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன், முஸ்லிம் மக்களும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள், எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கே இவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், போராட்டங்களை நடத்துவதற்கு எதிர்வரும் ஆறாம் திகதி வரை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.