பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாக உள்ளது.
மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களின் பிரகாரம் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் பரீட்சார்த்த தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் பரீட்சார்த்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளின் பிரகாரம் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான சிறப்பு ஒத்திகைத் தேர்தலாக இது நடைபெற்றுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களை எவ்வாறு அமைப்பது, வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சார்த்த தேர்தலில் 200க்கும் அதிகமான வாக்காளர்கள் கலந்துகொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த பரீட்சார்த்த தேர்தலின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது பொதுத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேர்தல் ஆணைக்குழுவினால் இறுதித் தீர்மானம் எட்டப்படுமாயின் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான திகதி, வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கங்களை அறிவிக்கும் வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.