நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் நேற்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் புதல்வர் வழக்கறிஞர் சரித குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக, நாளை காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.