கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
குளத்தின் நீர்மட்டம் 37அடி 05 அங்குலமாக அதிகரித்துள்ளதால் வான்கதவுகள் ஊடாகவும் வான் வழியாகவும் அதிகளவான நீர் வெளியேறுவதால், சில தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்நிலப் பகுதிகளான முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தின் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால் தமது கால்நடைகளையும் உடமைகளையும் கொண்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் நீர் வரத்தின் அளவு அதிகரித்து வருவதால் இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.




