நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 378 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அதில் 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 646 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 335 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்றைய நாளில் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதன் காரணமாக, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் முப்படையினராலும் நடாத்திச் செல்லப்படும் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில், 6 ஆயிரத்து 606 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய நாளில் மாத்திரம் 12 ஆயிரத்து 139 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய நாளில் 158 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய நாளில் 584 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 147 பேரும், கண்டி மாவட்டத்தில் 43 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணபட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களில் 236 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிராந்தியத்தில் மேலும் 7 பேருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்தியசுகாதார பணிப்பாளர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு, சாய்ந்தமருது காரைதீவு, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம் றிஸ்வி இதனை தெரிவித்தார்.
கிண்ணியா கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 5 பேருக்கும், ஹிஜ்ரா வீதியையும் சேர்ந்த மூவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கிண்ணியாவில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை மன்னார் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வவுனியா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு இன்று கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.