- Advertisement -
இந்திய மீனவர்கள் இனிமேல் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரே இன்று இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது மீனவர்கள் பயணித்த நான்கு படகுகள், மீன்களின் ஒலியை கண்டறிய பயன்படுத்தப்படும் எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட்ட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
அதன் பின்னர் மீண்டும் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாவே இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரித்து அவர்களை விடுதலை செய்தார்.
அத்துடன் குறித்த மீனவர்களே எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இறுதி இந்திய மீனவர்ளாக இருக்கவேண்டும் என்றும் இந்த எச்சரிக்கையை மீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்களின் பொருட்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
குறித்த வழக்கின் போது நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும், காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -