இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதனால் குளத்தின் 14 வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் 1 அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்ச்சியான நீர் வருகை காணப்படுவதனால் திறக்கப்பட்ட வான் கதவுகளின் அளவுகள் அதிகரிக்கப்படலாம் எனவும், கனகராயன் ஆற்று படுகையின் கீழ் உள்ள மக்கள் குறிப்பாக பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி நீர்ப்பாசன குளங்களான கல்மடுக்குளம் 10 அங்குலமும், பிரமந்தனாறு குளம் 8 அங்குலமும், கனகாம்பிகை குளம் 5 அங்குலமும் வான் பாய்ந்து வருகின்றது.
மேலும் அக்கராயன் குளம் 7 அங்குலமும், கரியாலை நாகபடுவான்குளம் 10 அங்குலமும், புதுமுறிப்பு குளம் 8 அங்குலமும், குடமுருட்டி குளம் 7 அங்குலமும், வன்னேரிக்குளம் 4 அங்குலமும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம்பொக்கனை, பெரியகுளம், உழவனுர், பிரமந்தனாறு உள்ளிட்ட தாழ்வு நில பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.