கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு கதவுகள் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இரணைமடு குளத்தின் 10 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர்பாசன திணைக்களம் மக்களை அறிவுறுத்தி உள்ளது.
இதனால், பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கல்மடு குளம் 2 அங்குலமும், பிரமந்தனாறு குளம் 2 அங்குலமும், கனகாம்பிகை 3 அங்குலமும், அக்கராயன்குளம் 1 அங்குலமும், கரியாலை நாகபடுவான் குளம் 3 அங்குலமும், புதுமுறிப்பு குளம் 1 அங்குலமும், குடமுருட்டிகுளம் 3 அங்குலமும், வன்னேரிக்குளம் 1 அங்குலமும் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் குறித்த குளங்களின் கீழ் உள்ள பகுதிகளிற்கு வெள்ள முன்னெச்சரிக்கையும் விடுத்துள்ளது.
வெள்ள அனர்த்த பகுதிகளாக காணப்படும் பொன்னகர், கனகாம்பிகை குளம், ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம், பிரமந்தனாறு, தர்மபுரம், உழவனூர், பெரியகுளம், கல்லாறு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான, வசந்தநகர், முறிகண்டி, செல்வபுரம் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.