மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை நாளையதினம் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலை வளாகங்களில் நுளம்புகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 247 டெங்கு நேயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 டெங்கு நேயாளர்கள் பதிவாகியுள்ளகாகவும் இதுவே உயர்ந்த எண்ணிக்கையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தின் சில பாடசாலைகள் ஆரம்பிக்கபட மாட்டாது என வவுனியா மாவட்டம் அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வவுனியா மாவட்டத்திலுள்ள 6 பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகள் நேற்றையதினம் முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளளமையும் குறிப்பிடத்தக்கது.