- Advertisement -
போதைப்பொருள் கடத்தலில் இராணுவம் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இதன்போது இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்த இராணுவத் தளபதி அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
- Advertisement -
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி,
“கொவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகப் பரவலடையாது பாதுகாக்க முடிந்தது.
அதற்காக நன்றி தெரிவிக்கவே ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிப்புரைக்கு அமைவாக இவ்விஜயத்தை மேற்கொண்டேன்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பல தனிமைப்படுத்தல் முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பிவந்த எம் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை விடயங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை சட்டவிரோதமான முறையில் கடத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாகவே கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்” என இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.