கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே, அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த இரண்டு நாட்களில், கம்பஹா மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் இரண்டாயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் களனிய, அத்தனகல்லை, மஹர, மினுவாங்கொடை, தொம்பே, ஜா எல, பியகம, நீர்கொழும்பு, மீரிகம, திவுலப்பிட்டிய, வத்தளை, கட்டானை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவளை, சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மூன்று வீடுகள் முழுமையாகவும், 136 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கொழும்பு மாவட்டத்தின், மொரட்டுவை, சீத்தாவக்கை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே, அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும், களுத்தறை மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 49 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் மூவாயிரத்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாகாணமாக வட மேல் மாகாணம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, வட மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 680 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ பகுதியிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கமைய, வென்னப்புவ பகுதியில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்று காரணமாக 118 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் மினிப்பே, பாதஹேவாஹெட்ட உள்ளிட்ட பகுதிகளிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது
இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதலாம் கட்ட மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புளத்கொஹுப்பிட்டிய தெஹியோவிட்ட, கேகாலை மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிறஅபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவிற்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது
வளிண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்திலும். அம்பாறை மற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும், பிற்பகல் 2.00 மணிக்கப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வட மேல் மாகாகணங்களிலும், திருகோணமலை. ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்றுவீசக் கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது