பாரிய பின்னடைவை சந்தித்துள்ள தேயிலைத் தொழிற்துறையின் மேம்பாடு, பல அம்சங்களில் நடைபெற வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, நட்டமடைந்திருக்கும் தோட்டங்களை கண்காணித்து, தேயிலை ஏற்றுமதியின் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு நீண்ட, நடுத்தர மற்றும் குறுகிய கால திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், தொழிற்துறை வீழ்ச்சிக்கு காரணமான விடயங்களை அடையாளங் கண்டு, உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு காணப்பட்ட கேள்வியை மீண்டும் ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 20 பெரிய பெருந்தோட்ட நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் செயலிழந்துள்ளதாகவும், சிறு தேயிலைத் தோட்டங்கள் அதிக உற்பத்தியை அடைந்துள்ளதால் தோட்ட நிறுவனங்களின் உற்பத்தி திறன் வேகமாக குறைந்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேயிலைத் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நட்டம் மற்றும் செயலற்ற தன்மைக்கான காரணங்களை குறுகிய காலத்தில் கண்டறிந்து நிரந்தர தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.