பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் திகதி குறித்து தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுத் தேர்தலுக்கான திகதி இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை, வர்த்தமானியொன்றாக வெளியிடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்
குறித்த வழிகாட்டல்களை, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சுயாதீன வைத்திய அதிகாரிகள், கட்சி அங்கத்தவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் சிலவற்றை இந்த வார இறுதிக்குள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட நாட்டின் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில், மாதிரித் தேர்தல்கள் சிலவற்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த முறை பொதுத் தேர்தலை நடாத்த 600 கோடி ரூபா வரை செலவாகலாம் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை நடத்தும் போது, அந்த தொகையானது 800 கோடி அல்லது 900 கோடி ரூபா வரை செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையமைகளின் அடிப்படையில் தேர்தலை நடத்த 60 முதல் 70 நாட்கள் வரை தேவைப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் இன்றைய தினமே முழுமையாக கொரோனா ஒழிக்கப்பட்டுவிட்டால், ஜூலை மாதம் 20ஆம் திகதி கூட பொதுத் தேர்தலை நடத்த, தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டார்.