தமது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் உடனடியாக அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக நிர்வாகம் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெலேவுக்கு அறிவிக்க முடியுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைவதற்காக தனது பெயர், போலியான கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நபர்கள் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று சில பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே விடுக்கப்படுவதாகவும் குறித்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான அழுத்தங்கள், மோசடிகள் தொடர்பில் 0112 354 479 அல்லது 0112 354 354 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.