இலட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பூமித்தாய் தம்மைத்தாமே புதிப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அதற்குரிய இடங்களை மீட்டெடுத்து வருகிறது.
நாம் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு, எமக்கு புத்துணர்வளிக்கும் சூரிய ஒளி இவை அனைத்தும் தவமின்றி இயற்கை எமக்களித்த வரம். இவை அனைத்தும் மனித இனத்துக்கு மட்டுமல்ல இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கையின் கொடை.
இதற்கமைய, அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான் என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான்.
எனது என்று சொந்தம் கொண்டாடப்படும் விஷயங்களின் மீது மட்டுமே அதீத அக்கறை கொள்ளப்படுகிறது. எங்கோ எவரோ விடும் தவறுகள் அனைத்து உயிரினங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றன.
ஒருகட்டத்தில் மனிதர்களின் செயல்கள் இயற்கையோடு பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால், மக்களின் சுயநலச் சிந்தனைகள் பொதுவான பூமியின் மீது பரிவுகொள்ளத் தடையாக இருந்தது. பல போராட்டங்கள், விளிப்புணர்வுகள் எல்லாம் கடந்து இறுதியில் எனது என்ற சுயநலத்தையே ஆயுதமாகக் கையில் எடுத்தது ஐக்கிய நாடுகள் சபை.
“இது எனது பூமி, இதை நான்தான் பாதுகாக்க வேண்டும்” என்ற சிந்தனையை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைக்கப் பெரும்பாடுபட்டார்கள். அப்படி விதைக்கப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வுதான் 44 ஆண்டுகளாக 183 நாடுகள் கொண்டாடும் உலக சுற்றுச்சூழல் தினமாக உருவெடுத்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் கொண்டாட்டங்கள் முடிவடையும் தினமான 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கென சூழலை அழித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானவற்றைத் தெரிவு செய்து அதை மூலப்பொருளாக வைத்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கமைய, இந்த வருடத்தில் கருப்பொருளாக பல்லுயிர் பாதுகாப்பு-இயற்கைக்கான நேரம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பில் மனிதர்கள் ஒரு அங்கமாகவே இருக்கின்றோம். அதனால் மனிதன் மாத்திரம் தனித்து வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துதான் இந்த அண்டம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
ஆனால், படைப்பிலேயே மிகவும் உன்னதமான உயிரினமான மனித இனம் அவ்வப்போது மனிதத்தை மறந்து செயற்படுகின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கப்போவது இந்தியாவின் கேரள மாநிலத்தில் சைலன்ட் வேலி வனப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவத்தை அன்றி வேறொன்றுமில்லை.
அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பமாக இருந்த யானைக்கு கொடுத்ததில், அதை உண்ட யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த யானையுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பரிதாமாக பலியானது. மனிதர்களை நம்பி உணவு வாங்கி உண்டதைத் தவிர வேறு எந்தவொரு குற்றத்தையும் அந்த யானை செய்துவிடவில்லை.
பொதுவாக மனிதர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் மிருகம் என்கிறோம். ஆனால் அந்த மிருகத்தை விட மோசமான செயல்களிலேயே இன்று மனிதர்கள் ஈடுபடுகின்றார்கள். சக மனிதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் அவர்கள் மீதுள்ள வன்மத்தை வளர்ப்பு பிராணிகள் மீது காட்ட முனைகின்றனர்.
எமது தேவைக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மூலமாகவும் இயற்கையின் சமநிலையை சீர் குழைத்துக்கொண்டிருக்கிறோம். எமது அஜாக்கிரதை தான்தோன்றித்தனம் அத்தனையும் எமக்கெதிராக நாமே இயற்கையை திசைமாற்றும் செயற்பாடுகளாகும்.
அனைத்து உயிரினங்களுக்கும் உரித்துடைய இயற்கையை மனிதன் மட்டும் அனுபவிக்க வேண்டுமென நினைப்பது மிகப்பெரிய சுயநலம். இதற்கு இயற்கை நிச்சயம் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லியேத்தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…….!