பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்த தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகச்சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் அது தொடர்பான அரசியல் அமைப்புக்கு உட்பட்ட விடயங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து கலந்துரையாடினோம். அதேபோன்று தேர்தலை எவ்வாறு நடத்துவது வாக்குகளை எண்ணும் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பன தொடர்பாக கலந்துரையாடினோம்.
அத்துடன் விரைவாக தேர்தல் விடயங்களை முன்னெடுக்க முடியாமைக்கு பிரதான காரணமாக தேர்தல் நிலையத்திலும் ஒரு சுகாதார அதிகாரியை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதனால் சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் விசேடமாக கொவிட் 19 வைரஸிற்கு எதிரான செயற்பட்டுவரும் விசேட வைத்திய தரப்பினர், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் போன்ற அனைவருக்கும் தபால் மூல வாக்களிப்புக்கான சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதித்தினம் இன்றைய தினமாக காணப்பட்டது. இருந்தும் அவர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஜுன் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே 8 ஆம் திகதி அல்லது 9 ஆம் திகதிகளுக்குள் விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.