வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
எனினும் அதன் அமைவிடம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இழுபறி நிலை காரணமாக குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போதும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாத காரணத்தினால் பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.
வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை கடந்த 03.06.2020 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்குரிய நடவடிக்கையில் வவுனியா மாவட்ட செயலகம் ஈடுபட்டுள்ளது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றையதினம் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்ததுடன் இன்று மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் கே.சபர்யா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.