யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழவதும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுருந்ததன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.
நாட்டின் போக்குவரத்துச் சேவைகள் இன்றுமுதல் வழமைக்குத் திரும்புவதாக அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று அறிவித்திருந்தார்.
இதற்கமைய இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,புகையிரத நிலையத்திற்குள் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.