மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுசா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று மலையக மக்கள் முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போதே மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோறன்ஸ் குறித்த முடிவினை அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின் அவரை கௌரவப்படுத்தும் வகையில் அனுசா சந்திரசேகரன் அவர்களுக்கு பிரதிசெயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம்.
ஆனால் அவருடைய சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.
அவருக்குப் பதிலாக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி என்பது மலையகத்தில் மக்கள் மத்தியில் இடம்பிடித்த கட்சியாகும்.
இதனை உருவாக்கிய அமரர் சந்திரசேகரனுக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே சிரேஷ்ட உறுப்பினர்களிடமிருந்து இப்பதவியினை பெற்று இவருக்கு கையளிக்கப்பட்டது.
ஆனால் இவர் அந்த பதவியினை முறையாக செய்யாமல் சுயநலமாக செயற்பட்டதன் காரணமாக அவரை நாங்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இராதாகிருஸ்னண் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.