நினைவேந்தல் நிகழ்வுகளை கொரோனாவைக் காரணம் காட்டித் தடுக்கும் அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு கையாளப் போகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கொரோனா சட்டத்தின் மூலம் நாங்கள் முப்பது பேர் ஒன்று சேர முடியாது என்றால் இந்த சட்டத்தினை வைத்துக்கொண்டு எப்படி தேர்தலுக்கான இலக்கத்தினை வழங்கியுள்ளார்கள்.
இந்த நினைவு நிகழ்வினை நடத்த விடாமல் பொலீசாரை போட்டு அடாவடி செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்றோ நாளையோ தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படபோகின்றது எப்படி இவர்கள் இந்த தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பிக்க விடப்போகின்றார்கள்.
எனவே இது ஒரு இரகசிய தேர்தலாக நடத்தப்போகின்றார்களா இருபதாயிரம் புலனாய்வாளர்கள் இறக்கப்பட்டுள்ளது என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியால் புலனாய்வாளர்களுக்கான கடமை வழங்கப்பட்டுள்ளது.
இருபதாயிரம் புலனாய்வாளர்களை வைத்துக்கொண்டு மக்களிடையே ஒரு அடக்குமுறை தேர்தலை நடத்த முற்படுகின்றது.
இந்த அரசு இலக்கங்கள் வழங்கப்பட்டுவிட்டன சுகாதார நடைமுறைகள் எப்படி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு பொதுஇடத்தில் 100 பேர் கூடலாம் எனத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது எமது நினைவேந்தலை தடுத்தது சரியா எனவே இந்த அரசு செயற்படும் விதம் ஜனநாயகத்திற்கும் எமது மக்களின் வாழ்வியலுக்கும் எதிரானதாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.