கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 34 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த கடற்படையினருக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 522ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இவர்களில் 17 பேர் ஹோமாகமை வைத்தியசாலையிலும், 12 பேர் இரணவில வைத்தியசாலையிலும், 5 பேர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், குணமடைந்து வீடு திரும்பிய கடற்படையினர் அனைவரும், மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்னர்.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 869 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 144 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 93 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 42 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 79 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 123 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 85 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 38 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 108 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 96 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 70 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 76 ஆயிரத்து தொள்ளாயிரத்து 57 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஆயிரத்து 718 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 527 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 892 பேரும், வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 544 பேரும், ஏனைய 91 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமூகத்தில் இருந்து எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.