தனது பதவியை ராஜினாமா செய்துள்ள, அமெரிக்காவின் அட்லான்டா நகர பொலிஸ் தலைமை அதிகாரியான எரிகா ஷீல்ட்ஸ் க்கு (Erika Shields) மாற்று பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக, அட்லான்டா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அட்லான்டா நகர பொலிஸ் தலைமை அதிகாரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவரான ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், 20 வருடங்களுக்கு மேலாக அட்லான்டா நகர பொலிஸ்துறையில் சேவை புரிந்துள்ள அவர் ஆற்றிய சேவைகளைக் கருத்திற் கொண்டு அவருக்கு மாற்று பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக, அட்லான்டா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அட்லான்டா நகரத்தில் அமைந்துள்ள வெண்டிஸ் (Wendy’s) எனும் உணவகத்தின் முன்பாக கடந்த நேற்று முன்தினம் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திலேயே ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) உயிரிழந்துள்ளார்.
குறித்த உணவகத்தின் முன்பாக நின்ற காரொன்றில் ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) உறக்க நிலையில் இருப்பதாகவும் அதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் அட்லான்டா நகர பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இதன்போது, ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) மது அருந்தியிருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரைக் கைது செய்ய பொலிஸார் முயன்றபோது அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கு இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவரான ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளொய்ட் (George Floyd) பொலிஸாரினால் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவரான ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) பொலிஸாரினால் கொல்லப்பட்டதை அடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் மேலும் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.