தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு விடுத்த உத்தரவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மீளப்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் ஏ பீற்றர் போல், சந்தேகநபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு தாம் விடுத்த உத்தரவை மீளப்பெற்றுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளமையை நிரூபிக்கும் மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்க தவறிய நிலையிலேயே இந்த உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.
அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உளைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதால் குறித்த 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளையை மீளப்பெறுவதாக நீதவான் தமது உத்தரவில் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நீண்ட சமர்பணத்தினை முன்வைத்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் நேற்றைய தினம் கட்டளையிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார். செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான், 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.