கொரோனா தொடர்பில் இலங்கைக்கு உள்ள அனுபவங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதில் பெற்றுக் கொண்ட வெற்றிகளை, அணி சேரா நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அணிசேரா நாடுகளின் காணொளி மூலமான விசேட சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்ற நிலையிலேயே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி மூலமான சந்திப்பில், 19 ஜனாதிபதிகள், ஆறு பிரதமர்கள், துனை ஜனாதிபதி ஒருவர், பிரதிஅமைச்சர் ஒருவர், மற்றும் எட்டு வெளிவிவாகார அமைச்சர்கள் உள்ளடங்கலாக 40 நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்திருந்தனர்.
அணிசேரா இயக்கத்தின் 2019 – 2022 காலப்பகுதிக்கு தலைமை தாங்கும் அஸர்பைஜான் (Azerbaijan) ஜனாதிபதி, இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது அமர்வுக்கான தலைவர் திஜ்ஜானி முஹம்மத் பாந்தே (Tijjani Muhammad-Bande), உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) மற்றும் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் Moussa Faki Mahamat ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்டெரெஸ் (António Guterres) ஒளிப்பதிவு செய்யப்பட்ட தனது விசேட செய்தியை மாநாட்டுக்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.