முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளம் மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்கான நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னதாக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 14ஆம் திகதி முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஐந்து மணி நேர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அவர் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மீண்டும் இரண்டாவது நாளாகவும் இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பல சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.