வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை நினைவேந்தல் நிகழ்வுக்கு கூட்டமைப்பின் இரு வேட்பாளர்களை அழைத்தமையால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை அமர்வின் போது இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு வேட்பாளர்களை அழைத்தமையால் சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வுக்கு சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர் ஆகியோரால் சபை உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி காலை 10 மணிக்கு சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் முள்ளிவாய்கால் மண்ணில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களும் முன்னாள் மகாணசபை உறுப்பினர்களுமான ப.சத்தியலிங்கம் மற்றும் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் சபையின் அஞ்சலி நிகழ்வுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது ஒரு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் சபை அஞ்சலி நிகழ்வு எவ்வாறு அழைக்க முடியும் என சபை உறுப்பினர்கள் சிலர் தவிசாளருடன் முரண்பட்டனர்.
இதனையடுத்து சபையில் இருந்து வெளியேறி குறித்த வேட்பாளர்களுடன் பிரதேச சபை வளாகத்தில் அஞ்சலி நிகழ்வை தவிசாளர் நடத்தியிருந்தார்.
தவிசாளர் தனது கட்சி சார்ந்த குறித்த இருவருக்கு மட்டும் அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவிசாளரின் தன்னிச்சையான போக்கை கண்டித்தும் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகவும், சபையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காரணமின்றி தவிசாளர் ஒத்தி வைத்துள்ளதாகவும் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் து.நடராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘சபையில் அஞ்சலி நிகழ்வு நடத்த முற்பட்ட வேளை குழப்பம் ஏற்பட்டதால் சபையின் வெளியில் சென்று இந்த அஞ்சலி நிகழ்வை செய்தேன்.
நான் கட்சி பார்த்து செயற்படவில்லை. குழப்பம் காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.