நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரத்தினபுரி பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தவலம பகுதிக்கும், களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் நோர்வூட் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொத்மலை ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது
இந்த நிலையில், மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்கப்படடும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் ஏற்பட்டுள்ள நில வெடிப்பு காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, கோகாலை, களுத்தறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான தகவல்களை வழங்குகின்றார் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்
இதேவேளை, கடற்பிராந்தியங்கள் தொடர்பிலும் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெளிபடுத்தினார்.