யாழ் குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும்.
மாலை , இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் வைத்தியர்களுக்கு உயிரை காப்பாற்ற முடியாமல் போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை.
கொரோனா தொற்றினால் தற்போது யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார் சைக்கிளினை வழங்கும் பெற்றோர்களும், இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.
இளைஞர்கள் இதன் ஆபத்து என்று தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கொண்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை மேற்கொள்ள வேண்டும்” என வைத்திய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.