அணிசேரா நாடுகளின் காணொளி மூலமான விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
120 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா இயக்கம் 1961ஆம் ஆண்டு யூகோஸ்லாவியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்திருக்கும் நாடுகளின் கூட்டமைப்பாக அணிசேரா இயக்கம் கருதப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில், உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில், அணிசேரா இயக்கத்தின் காணொளி மூலமான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், இலங்கை சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலை 6.15க்கு உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அணிசேரா இயக்கத்தின் 2019 – 2022 காலப்பகுதிக்கு தலைமை தாங்கும் அஸர்பைஜான் (Azerbaijan) ஜனாதிபதி, இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) குறித்த காணொளி மூலமான விசேட சந்திப்புக்கு தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது அமர்வுக்கான தலைவர் திஜ்ஜானி முஹம்மத் பாந்தே (Tijjani Muhammad-Bande), உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) மற்றும் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் மவுஸ்ஸா ஃபாகி மஹமட் (Moussa Faki Mahamat) ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்டெரெஸ் (António Guterres) ஒளிப்பதிவு செய்யப்பட்ட தனது விசேட செய்தியை மாநாட்டுக்காக வழங்கவுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி (Arif Alvi), மலேஷிய பிரதமர் தான் ஶ்ரீ முஹியிதீன் யாஸின் (Tan Sri Muhyiddin Yassin) உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும், குறித்த காணொளி மூலமான விசேட சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.