நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது.
அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
யானையை பார்வையிட்ட சிங்காரா வனத்துறையினர், பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்து வந்தனர்.
ஆனாலும் காயம் குணமாகாமலேயே இருந்தது.
யானைக்குக் கூடுதல் சிகிச்சை தேவை என்பதை அறிந்து, இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு கடந்த 28 ஆம் தேதி வனக் கால்நடை மருத்துவ குழுவினர்,காட்டு யானையை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர். அரை மயக்கத்தில் இருந்த காட்டு யானையின் அருகில் நெருங்கி 2 மணி நேர சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்தனர்.
தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர்.
கடந்த 17ஆம் தேதி அதே யானையின் இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் கொடுமையான காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட அவதிப்பட்டது.
யானையின் இந்தக் காயத்தைப் பார்த்து பதறிய வனத்துறையினர், யானைப் பிடித்து மயக்க ஊசி செலுத்தி தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இரண்டு வனக் கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் வசிம் , விஜய், கிரி, கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் இன்று காலை யானையைச் சுற்றி வளைத்தனர்.
யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அருகில் நெருங்கிய குழுவினர், முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் வாகனத்தில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்குச் சென்றனர். செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், “காயத்துடன் அவதிப்பட்டு வந்த யானையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முழு முயற்சியில் இறங்கினோம். இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் சரியாகவே செய்துவந்தோம். எதிர்பாராதவிதமாக யானை உயிரிழத்துவிட்டது.
நாளை உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளோம்” என்றனர்.
யானைக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் சுகுமாரன்,“இந்த யானையின் முதுகுப் பகுதியில் இருந்த காயம் மிக ஆழமாக இருந்தது.
சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால், சமீபத்தில் காது பகுதியில் ஏற்பட்டுள்ளது தீக்காயம் போன்று உள்ளது.
பெட்ரோல் வெடிகுண்டு போன்ற ஒன்றை யானையின் மீது வீசியதால் இத்தகைய மோசமான காயம் ஏற்பட்டிருக்கலாம்’’ என்றார்.
யானைக்கு ஏற்பட்ட காயத்தின் பிண்ணனி குறித்து நம்மிடம் பேசிய யானைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் ஒருவர்,“யானையின் முதுகில் கடுமையான காயம் ஏற்பட்டதே எங்களுக்கு மர்மமாக உள்ளது.
யானையின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனாலேயே இடது காதில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காதின் உள்பகுதி வரை தீக்காயம் பரவியதால், யானை மிகவும் பலவீனமடைந்தது.
காயத்தில் அவதிப்பட்ட யானைக்கு மிகத் தாமதமாகவே வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். யானையை நாம் இழக்க இதுவும் ஒரு காரணம்” என்றார்.