கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் இன்றைய தினம் தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நபர்களை தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, அனுப்பிவைக்கப்படவுள்ள அனைவரும் இன்று காலை ஏழு மணிக்கு நுகேகொடை பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர்களுக்கு தேவையான சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், சிறுபிள்ளைகள் உள்ள தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், இவ்வாறு அனுப்பிவைக்கப்படுபவர்கள் தமது ஊர்களில் 14 நாட்கள் அல்லது சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்படுகின்ற காலப்பகுதிக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.